பிரித்தானியாவில் 40 ஆண்டுகளுக்கு பின் போலியோ தொற்று வியாபித்து வருவதாக அதிகாரிகள் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன
இதனால் சிறார்கள் தொடர்பில் பிரித்தானிய பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சுகாதார அமைப்பின் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் முதல் லண்டன் கழிவுநீர் மாதிரிகளில் நிபுணர்கள் குறித்த தொற்றைக் கண்டறிந்துள்ளனர்.
இது கண்டிப்பாக சமூக பரவலின் தெளிவான அறிகுறி எனவும் சுகாதாரத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பிரித்தானியாவில் இதுவரை எவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படவில்லை.
போலியோ தொற்றின் மாதிரிகள் தற்போது கிழக்கு மற்றும் வடக்கு லண்டனில் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால், கண்டிப்பாக போலியோ தொற்று சமூக பரவலில் உள்ளது என்பது மட்டும் உறுதி என சுகாதார தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லண்டனில் தற்போது குறித்த தொற்று வியாபித்து வரலாம் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக விரைவில் நாடு முழுவதும் இதன் பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என கவலை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கடைசியாக 1984 ஆம் ஆண்டு போலியோ நோயால் மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் 2003ல் போலியோ இல்லாத நாடாக பிரித்தானியா அறிவிக்கப்பட்டது.
1950 களில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, போலியோ தொற்றால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் முடங்கிப்போனதுடன் நூற்றுக்கணக்கான மக்கள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.