மரியுபோலில் முற்றுகையிடப்பட்டிருந்த இரும்பு தொழிற்சாலையில் இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சகல மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இத்தகவலை உக்ரைன் மற்றும் ரஷ்யா என்பன அறிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பான தகவல்களை குறித்த இரண்டு தரப்பும் உறுதிப்படுத்தவில்லை.
ரஷ்யாவினால் மரியுபோலில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
குறித்த பகுதியிலுள்ள உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரை சரணடையக் கோரி, ரஷ்யா அங்குள்ள இரும்பு தொழிற்சாலையை முற்றுகையிட்டிருந்தது.
இந்நிலையில் அங்குள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு இறுதியாக மீட்கப்பட்டவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது குறித்த தகவல்கள் தெளிவாகவில்லை.
எனினும் மனிதாபிமான ரீதியிலான மீட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டதாக உக்ரைன் பிரதமர் அறிவித்துள்ளார்.
அத்துடன் மீட்கப்பட்ட மக்கள் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை அடைவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரும்பு தொழிற்சாலையில் இருந்து 300க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.