கொட்டகலை நகரில் பிரதான வீதியைக் கடக்க முயற்சித்த நபரொருவர் மீது, லொறியொன்று மோதியுள்ள நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கொட்டகலை ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 78 வயதான ராமசாமி ராஜலிங்கம் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
ஹட்டன் திசையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த லொறியொன்று, கொட்டகலை ஹட்டன் பகுதியில் வீதியைக் கடக்க முயற்சித்த முதியவர் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி, சம்பவ இடத்தை விட்டுத் தப்பிச் செல்ல முயற்சித்துள்ள நிலையில், பிரதேச மக்கள் லொறியை பின் தொடர்ந்துள்ளனர்.
இதன்போது, குறித்த லொறியை பத்தனை சந்திப்பில் நிறுத்துவதற்கு முயற்சித்த வேளையில், லொறியின் சாரதி, லொறியை மீண்டும் ஹட்டன் நோக்கிச் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், லொறியின் சாரதி, லொறியை கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய சாரதி, திம்புள்ள – பத்தனை பொலிஸ் நிலையத்தில் பின்னர் சரணடைந்துள்ளார்.