பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்ய வேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் என்பதற்கு புதிய வரைவிலக்கணம் வழங்கப்பட்டு அதற்கான தண்டனைகள் குற்றவியல் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.
2022ம் ஆண்டுக்கான மனித உரிமை ஆணைக்குழுவின் திட்டங்கள் தொடர்பில் ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்த போது இந்த விடயங்கள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நபர் ஒருவரை கைது செய்து தடுத்து வைக்கக்கூடிய கால எல்லை அரசியல் சாசனத்திற்கு முரணானது என தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையில் எவருக்கும் தண்டனை விதிக்கப்பட முடியாது என தெரிவித்துள்ளது.
குற்றவியல் சட்டம், குற்றவியல் வழக்கு விசாரணை சட்டம், பிணை வழங்குதல் சட்டம் மற்றும் நீதிமன்ற சட்டம் என்பன திருத்தப்பட வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.