மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள சிவன் படத்திற்கு பூஜை செய்து அருகில் உள்ள சிவன்கோவில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் சிவாலயங்களுக்கு சென்று நான்கு காலங்களிலும் நடைபெறும் விசேஷ பூஜை அபிஷேகங்களை கண்டுகளிக்கலாம். பால், தயிர், நெய், தேன், பூஜை பொருட்களை கொடுக்கலாம்.
அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். உபவாசம் இருக்க முடியாதவர்கள் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான காலகட்டம் ‘லிங்கோத்பவ காலம்’ எனப்படுகிறது. இந்த நேரத்தில் மும்மூர்த்திகளும், சிவலிங்கத்தில் அருள்வதாக ஐதீகம். எனவே அந்த வேளையில் சிவலிங்க வழிபாடு செய்தால், பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
மகாசிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியைப் பெறுவர். இந்த விரதத்தை 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும். அது இயலாதவர்கள், 12 ஆண்டுகளாவது தொடர்ச்சியாக மகாசிவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர், வீடுபேறு அடைவதோடு, அவர்களின் சந்ததியினர் 21 தலைமுறைக்கு பலன் பெறுவர்.